திருவனந்தபுரம்: கேரளாவில் நிகழ்ந்த வேன் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலியை சேர்ந்த ஒரு ‘பிரஷர் குக்கர்’ நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தது.
அதன்படி ஒரு வேனில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றனர்.
கேரளாவின் மூணாறு, ஆனக்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் பின்னர், ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். செவ்வாய்க் கிழமை மாலை இவர்கள் இடுக்கி மாவட்டம் மாங்குளம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட நால்வர் மாண்டனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்புக் குழுவினர், மீட்டு, அடிமலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இடுக்கி மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அபினேஷ் மூர்த்தி, 40, அவருடைய ஒரு வயது மகன் தன்விக், தேனியைச் சேர்ந்த குணசேந்திரன், 71, ஈரோட்டை சேர்ந்த பி.கே.சேது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.