புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை நிதி சார்ந்து முடக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
டெல்லியில் காங்கிஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 21) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.
“காங்கிரஸ் கட்சியை நிதி அடிப்படையில் முடக்குவதற்கு பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதி முடக்கப்பட்டு, எங்கள் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கப்படுகிறது,” என்று சோனியா சாடினார்.
இத்தகைய சவாலான சூழலில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள தங்களால் ஆன முயற்சிகளை எடுப்போம் என்றும் அவர் சொன்னார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் இன்று ஜனநாயகம் இல்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதே பொய்யாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்களுக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன, ஆனால் எங்களால் எந்த தேர்தல் செலவுக்கும் 2 ரூபாய்கூட கொடுக்க முடியவில்லை,” என்று சொன்னார்.
பாஜக அரசின் நடவடிக்கை காங்கிரசின்மீது நிகழ்த்தப்பட்ட குற்றவியல் தாக்குதல் என்ற அவர், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அத்தாக்குதலைத் தங்கள்மீது நிகழ்த்தி இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அதன்பின் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “எந்த ஒரு ஜனநாயகத்திற்கும், எல்லாக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் வெளிப்படையான தேர்தலும் மிகவும் அவசியம். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊடகத்தின்மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கக்கூடாது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை,தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது,” என்றும் வலியுறுத்தினார்.