சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை காலை (மார்ச் 21) முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அவரது வீடு உள்ளது. அங்கு பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்புடைய வழக்கில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தடையை மீறி குட்கா விற்க லஞ்சம் பெற்ற வழக்கில் ஏற்கெனவே விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த காலங்களில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவரது சொத்துகளையும் முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை கட்டுமான நிறுவனத்துக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை (மார்ச் 22) முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
துணை ராணுவப் படைபினர் பாதுகாப்புடன் சென்னை ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதே கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.