டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

2 mins read
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பில் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை நடவடிக்கை
ebba8174-4a01-4bfa-b91d-c2ea85716ea6
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வியாழக்கிழமை (மார்ச் 21) இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. - படம்: இந்துதமிழ்

புதுடெல்லி: இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 21) இரவு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தனர்.

முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் திரு கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அமலாக்கத்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, இரவு 11 மணிக்கு அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அந்த அலுவலகத்தைச் சுற்றிக் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த வட்டாரத்தில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் அவ்வட்டாரத்திற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

“கெஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்படுவார். அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்துவர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்,” என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

திரு கெஜ்ரிவாலைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறை நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது.

முன்னதாக, அமலாக்கத்துறை இவ்வழக்கு தொடர்பில் டெல்லி முதல்வருக்குப் பலமுறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதிலிருந்து பாதுகாப்புக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வியாழக்கிழமை இரவு அவசர விசாரணை நடத்தும்படி திரு கெஜ்ரிவால் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, திரு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, “எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்,” என்று சாடியுள்ளார்.

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. சிறையில் அடைக்கப்பட்டாலும் அரசாங்கத்தையும் கட்சியையும் திரு கெஜ்ரிவாலே வழிநடத்துவார் என்று அது கூறியுள்ளது.

கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள் பக்கம் 5ல்

குறிப்புச் சொற்கள்