திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தாரக்கல் கோயில் திருவிழாவில் இரு யானைகள் சண்டையிட்டதில் பலர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ‘அம்மாதிருவடி’ திருவுருவத்தை யானை மீது வைத்து ஊர்வலமாகச் சென்றபோது யானை மிரண்டு மதம்பிடித்தது போல ஆனது. யானைப் பாகன் ஸ்ரீகுமாரை (வயது 53) யானை மூன்று முறை தாக்க முயன்றபோது, நூலிழையில் அவர் உயிர் தப்பினார்
பின்னர் அந்த மதம் பிடித்த யானை ஆராட்டுப்புழா குலதெய்வத்துக்காக அழைத்து வரப்பட்ட புத்துப்பள்ளி அர்ஜூன் யானையையும் தாக்கியது. அதனைத் தொடர்ந்து, இரண்டு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டது. காயமடைந்த அர்ஜூனன் யானை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நிற்காமல் ஓடியது.
யானைகள் ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கியதில், திருவிழாவுக்கு வந்திருந்த பலருக்கும் காயமேற்பட்டது. சிலரை யானைகள் தூக்கி தரையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. சிலர், சம்பவ இடத்திலிருந்து ஓட முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.
பிறகு யானைகளைக் கட்டுப்படுத்தும் படையினரால் மதம்பிடித்த யானை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.