திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
அந்த மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஹைதராபாத்தில் வசித்ததாகவும் அனந்தபூர் டிஎஸ்பி வெங்கடா சிவா ரெட்டி தெரிவித்தார்.
பதினைந்து நாள்களுக்கு முன்பு, கிருஷ்ணமூர்த்தி எனும் அண்டைவீட்டாரின் வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதால் 81 கிராம் தங்க நகைகளை ஒபுலம்மா எனும் மூதாட்டி அவருக்கு இரவல் வழங்கினார்.
இரண்டு வாரங்கள் கழித்ததும் நகைகளைத் திரும்பக் கோரிய ஒபுலம்மாவிடம் அவற்றை வழங்க கிருஷ்ணமூர்த்தி மறுத்ததால், கிராமப்புறத்தில் இருந்த பெரியர்களை ஒபுலம்மா அணுகினார். இரவல் பெற்ற நகைகளை உரியவரிடம் திரும்ப தந்துவிடுமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் கூறினர்.
இதனால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் வெள்ளிக்கிழமை ஒபுலம்மாவை கோடரியால் வெட்டிக் கொன்றனர்.
ஒபுலம்மாவின் குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணைக் காவலில் அவர்கள் வைத்தனர்.
இந்நிலையில், அணைக்கட்டில் இருந்து மீட்கப்பட்ட ஒபுலம்மாவின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.