புதுடெல்லி: கைது செய்யப்பட்ட 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களுடன் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஐஎன்எஸ் கோல்கத்தா சனிக்கிழமை (மார்ச் 24) மும்பையை அடைந்தது.
அந்தக் கடற்கொள்ளையர்கள் மும்பை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையர்களால் ஆழ்கடல் பகுதியில் கப்பல்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் கடற்கொள்ளையர்களுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர். ஹரிகுமார் சூளுரைத்துள்ளார்.
இந்த 35 கடற்கொள்ளையர்களும் அரபிக் கடலில் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றையும் அதில் இருந்த சிப்பந்திகளையும் மூன்று மாதங்களுக்கும் மேலாக பிணை பிடித்திருந்ததாகவும் இந்திய கடற்படையினர் கப்பலைச் சுற்றி வளைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பிறகு கடற்கொள்ளையர்கள் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கப்பலின் 17 சிப்பந்திகள் மீட்கப்பட்டனர்.