கொல்லம்: மாது ஒருவரின் ஸ்கூட்டரில் கம்பிவடம் சிக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் சந்தியா.
மார்ச் 23ஆம் தேதியன்று கணவரின் பட்டறையில் உதவி செய்துவிட்டு தனது ஸ்கூட்டரில் அவர் கிளம்பவிருந்த நேரத்தில் அதிக சரக்குகளைக் கொண்ட பெரிய லாரி ஒன்று அவரைத் தாண்டிச் சென்றது.
லாரியில் இருந்த பொருள்கள் மேலே இருந்த கம்பிவடத்தைப் பெயர்த்ததை அடுத்து, பின்னால் சந்தியாவின் ஸ்கூட்டரில் அந்தக் கம்பிவடம் சிக்கிக்கொண்டது.
லாரி முன்னோக்கிச் செல்ல, ஸ்கூட்டரையும் அதன் மேல் இருந்த சந்தியாவையும் இழுத்துச் சென்றது.
கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, சந்தியா தரையில் விழுந்தார்.
அவரின் ஸ்கூட்டர் உயரப் பறந்த பிறகு அவர் மீது விழுந்தது.
அக்கம்பக்கத்தார் உடனே லாரியை நிறுத்தினர்.
அருகில் இருந்த மருத்துவமனைக்கு சந்தியா கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், காயங்களின் கடுமை கருதி கூடுதல் சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.