திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் அனக்காப்பள்ளியில் முந்திரிப் பழங்களைப் பறிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அனக்காப்பள்ளியைச் சேர்ந்த லோகநாதம் (47), கூர்மா ராவ் (49), லோகநாதம் மனைவி சாவித்திரி ஆகியோர் முந்திரி தோட்டத்தில் பழங்களை பறித்துக்கொண்டிருந்த போது, கரடி ஒன்று திடீரென பாய்ந்து சாவித்திரியைத் தாக்கியது. இதைக் கண்ட லோகநாதம் மனைவியைக் காப்பாற்ற முயன்றார்.
அப்போது கரடி லோகநாதத்தையும் தாக்கியது. தம்பதியைக் காப்பாற்ற முயன்ற கூர்மா ராவையும் கரடி சரமாரியாகத் தாக்கியது.
மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிய, பக்கத்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவர கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது.
மருத்துவப் பரிசோதனையில் கரடி தாக்கியதில் லோகநாதம், கூர்மா ராவ் இறந்தது தெரிந்தது.
சாவித்திரி பலாசா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முந்திரி தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லவே பயமாக உள்ளது என ஊழியர்கள் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.