புதுடெல்லி: வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் மீண்டும் போட்டியிடுகிறாா். இவர், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.
வேட்பாளர் அஜய் ராய் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவது இது முதல் முறையல்ல.
கடந்த 2014, 2019 தேர்தல்களில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக நேரடிப் போட்டியில் களமிறக்கப் பட்டுள்ளார்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அனைத்துக் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து வருவதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் புதிய நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 46 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்துக்கு ஏழு வேட்பாளா்கள் உள்பட மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் இம்மாநிலத்தின் ராய்கா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் மத்திய அமைச்சா் நிதின் கட்காரியை எதிா்த்து விகாஷ் தாக்கரே போட்டியிடுகிறாா்.
தொடர்புடைய செய்திகள்
பெரிதும் எதிா்பாா்க்கப்படும் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரே பரேலி தொகுதிக்கான வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
அமேதியில் கடந்த முறை ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இம்முறை அதே தொகுதியில் அவா் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் எம்.பி.யாக உள்ள ராகுல், அங்கு மீண்டும் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகி விட்டது.
ரே பரேலி எம்.பி. சோனியா காந்தி, மாநிலங்களவைக்குத் தோ்வாகிவிட்டதால், அத்தொகுதி அவரின் மகள் பிரியங்கா வதேராவுக்கு ஒதுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுவரை 183 தொகுதிகளுக்கான வேட்பாளா்களைக் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

