ஹைதராபாத்: தெலுங்கானாவில் பட்டப்பகலில் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க வந்த திருடர்களை அவ்வீட்டில் இருந்த தாயும் மகளும் சரமாரியாகத் தாக்கி, அவர்களைத் தெறித்து ஓடும்படி விரட்டி அடித்த சம்பவம் பலதரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்தக் காணொளியைக் கண்ட அம்மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, தாய், மகளை நேரில் சந்தித்து அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்துகள் கொடுத்து பாராட்டினார்.
தெலுங்கானா மாநிலம், ரசூல்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மதியம் தாயும் மகளும் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் இரு திருடர்கள் புகுந்துள்ளனர்.
அவர்களைக் கண்டு பயப்படாத தாயும் மகளும் தங்கள் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு திருடர்களைத் அடித்துத் தாக்கி விரட்டினர். திருடர்களும் தாய்-மகளைப் பலமாகத் தாக்கி வீட்டில் இருக்கும் பொருள்களைத் திருட முயன்றனர்.
எனினும், பெண்களின் தாக்குதலால் தப்பித்தோம், பிழைத்தோம் என இரு திருடர்களும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
புலியை முறத்தால் விரட்டிய வீரப்பெண் போல், கத்தி, நாட்டுத் துப்பாக்கியோடு வந்த இரு திருடர்களையும் புறமுதுகிட்டு ஓட விட்ட தாய்-மகளுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.