புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“சர்வாதிகாரிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். கட்சிகளைத் துண்டாக்குவது, நிதிநிறுவனங்களிடம் இருந்து நிதி ஆதாயம் பெறுவது, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்றவற்றை செய்து வருகிறது.
“இப்போது இதுபோதாதென மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களைக் கைது செய்வதையும் வழக்கத்துக்குக் கொண்டு வருகின்றனர். இதற்கெல்லாம் இண்டியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது,” என்று ராகுல் கூறியுள்ளார்.
கார்கே: மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது
“தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அராஜக பாஜக.
“நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என உறுதியாக நம்பினால் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி உள்ளது ஏன்? தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது ஏன்?
“இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு முடிவு கட்டிவிடும் என்று அக் கட்சி அஞ்சுகிறது. அதனால்தான் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறது.
“இதுவே மாற்றத்துக்கான நேரம். பொறுப்பில் இருந்து விடை கொடுக்கும் நேரம்,” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.