சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக 25.3.24ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்து மனுதாக்கல் செய்தனர்.
தென்சென்னையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் திங்கள்கிழமை (25.03.24) ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வடசென்னையில் வாக்குவாதம்: வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்ய 2ஆம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.
அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7ஆம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம், திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் , திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள், திமுக சார்பில் போட்டியிடும் சி.என் அண்ணாதுரை ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மதுரை தொகுதியில் பாஜக சார்பில் பேராசிரியர் இராம சீனிவாசன், அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் பொரும்பாக்கம் ராஜசேகர் , திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ , ஆரணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கனேஷ்குமார், கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.