புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷா ஊடகம் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் 70 விழுக்காடு குறைந்துள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 68 விழுக்காடு சரிந்துள்ளது.
“ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாதுகாப்புப் படைகளைத் திரும்பப்பெற்று, சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டுப் பணிகளை ஜம்மு - காஷ்மீா் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. முன்பு ஜம்மு - காஷ்மீா் காவல் துறையினா் மீது அவநம்பிக்கை நிலவியது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. எனவே, சட்டம், ஒழுங்கு பராமரிப்புப் பணிகளை அவர்களிடமே ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்படி (ஏஎஃப்எஸ்பிஏ), பிரச்சினைக்குரிய பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிப்பதற்கு தேவைப்பட்டால் சோதனையிட்டு கைது செய்யவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள அந்தச் சட்டத்தை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவுக்குச் சொந்தமானது. அதை மீட்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரின், காஷ்மீரியின் இலக்கு. பாகிஸ்தானின் சதிகளில் இருந்து ஜம்மு -காஷ்மீா் இளைஞா்கள் விலகியிருக்க வேண்டும். தற்போது பட்டினி மற்றும் வறுமையால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீா் இளைஞா்களிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்துமே தவிர, பாகிஸ்தானை தோற்றுவாயாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளிடம் மத்திய அரசு ஒருபோதும் பேச்சுவாா்த்தை நடத்தாது. ஏனெனில் பயங்கரவாதத்தால் 40,000 இளைஞா்கள் உயிரிழந்ததற்கு அந்த அமைப்புகளே காரணம் என்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.