புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு மேம்பட்டு வருவதால் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் பாதுகாப்புப் படைகளை மீட்டுக்கொள்ளப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேசிய சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சீக்கிய வழிபாட்டுக் கூடத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு திடீரென குண்டுவெடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஞ்ச் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைப் பகுதியில் உள்ள குருத்வாரா பெட்டக் மகந்த் மோகன் சிங் சீக்கிய வழிபாட்டுக் கூடத்திற்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இரவு 11.39 மணிக்கு நிகழ்ந்தது.
காவல்துறை மற்றும் ராணுவத்தினர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று குண்டுவெடிப்புக் குறித்து ஆய்வு நடத்தினர். முதற்கட்ட ஆய்வில், இந்தக் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த பகுதி பாதுகாப்புப் படையின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏராளமான காவலர்களும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதேபோன்று குண்டுவெடிப்புச் சம்பவம் ஜம்மு - காஷ்மீரின் சுரங்கோட்டே வட்டாரத்தில் உள்ள கோயிலுக்கு அருகே நிகழ்த்தப்பட்டது.
மக்களவைத் தேர்தல் தொடங்கவிருக்கும் சமயத்தில் நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.