புதுடெல்லி: வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து 80,000 பேர் பாரதிய ஜனதா கட்சிக்குத் தாவி உள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக தடம் பதித்துள்ள பாஜக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து கட்சியை விரிவுபடுத்தி வருகிறது.
இதற்காக அக்கட்சி பல்வேறு குழுக்களை அமைத்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன் பிற கட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் என 1 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. அது தேசிய அளவில் என்றில்லாமல், மாவட்ட அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது.
இதன்படி, அண்மையில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் அசாக் சவான், முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இணைந்த பிரபலங்கள்.
இதேபோன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவ்நீத் சிங் பிட்டு, அகில இந்திய திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த அர்ஜுன் சிங், ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த வரபிரசாத ராவ் மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த சுஷில் குமார் ரிங்கு உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், வெவ்வேறு கட்சிகளில் இருந்து இதுவரை பாஜகவில் 80 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 1 லட்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

