பெங்களூரு: நண்பர் ஒருவரின் குறும்புத்தனம் 24 வயது ஆடவர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் யோகேஷ், 24.
இவ்வாரம் திங்கட்கிழமையன்று (மார்ச் 25) தன் மோட்டார்சைக்கிளைப் பழுதுபார்ப்பதற்காக தன் நண்பர்கள் வேலைசெய்யும் வாகனப் பராமரிப்புச் சேவை நிலையத்திற்குச் சென்றார் யோகேஷ்.
அவ்வாகனத்தில் காணப்படும் சில பிரச்சினைகளைச் சரிசெய்து, அதனைக் கழுவும்படி, அந்நிலையத்திலுள்ள தம் நண்பர் முரளியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, வாகனத்தைக் கழுவிய முரளி, பின்னர் அதனைக் காற்றழுத்தி(கம்ப்ரசர்) கொண்டு உலர்த்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வேடிக்கையாக யோகேஷின் முகத்தில் அவர் காற்றை அடித்தார். அதிலிருந்து தப்பிக்க முயன்ற யோகேஷ், குனிந்தபடி திரும்பினார்.
அப்போது, முரளி தன் கையிலிருந்த காற்றழுத்திக் குழாயை யோகேஷின் மலவாயை நோக்கித் திருப்பினார்.
காற்றழுத்தியுடன் இணைக்கப்பட்ட அக்குழாய் யோகேஷின் உடலைத் தொட்டபடி இல்லாதபோதும் மிகுந்த அழுத்தத்துடன் அதிலிருந்து வெளியான காற்று அவரது மலவாய் வழியாக மலக்குடலைச் சென்றடைந்தது. உடனே யோகேஷ் மயங்கி விழ, ரத்தம் கசிந்தது.
விரைந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், இரு நாள்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, வாகனப் பராமரிப்புச் சேவை நிலைய ஊழியரான 23 வயது முரளியைக் காவல்துறை கைது செய்து, நோக்கமின்றிக் கொலை செய்ததாக வழக்கு பதிந்துள்ளது.