அனந்தூர், கர்நாடகா: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ளது அனந்தூர் எனும் கிராமம்.
அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது.
குடிநீர்க் குழாயில் கழிவுநீர் ஏதும் கலந்துள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர் அதிகாரிகள்.
கழிவு நீர் கலக்கவில்லை என்று உறுதியானதும் மார்ச் 29ஆம் தேதி நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் இளையர் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தீயணைப்புப் படையினர் உடலை மீட்டதாகவும் விசாரணையில் அந்த இளையர் அனந்தூர் கிராமத்தில் வசித்த 26 வயது ராஜு என்று தெரியவந்ததாகவும் காவல்துறை கூறியது.
ராஜு குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. விசாரணை தொடரும் வேளையில், கடந்த ஆறு நாள்களாக அந்தத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட நீரை மக்கள் குடித்ததால், சுகாதாரத் துறையினர் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்குப் பரிசோதனைகள் செய்துவருகின்றனர்.