புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்மு, இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட ஐவரில் நால்வருக்கு மார்ச் 30ஆம் தேதி விருதை வழங்கிக் கௌரவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) அவரது இல்லத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இதேபோல் அவரது இல்லத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருது பாரத ரத்னா.
இந்த ஆண்டு திரு அத்வானியுடன் முன்னாள் பிரதமர்கள் சௌத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் என ஐவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
திரு அத்வானியைத் தவிர்த்து மற்ற நால்வருக்கும் அவர்களின் இறப்புக்குப் பின்னர் பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் ஆக உயரிய விருதை ஒரே ஆண்டில் ஐவர் பெறுவது இதுவே முதல்முறை.
பி.வி. நரசிம்ம ராவுக்கான பாரத் ரத்னா விருதை அவரது மகன் பி.வி. பிரபாகர் ராவும் செளத்ரி சரண் சிங்குக்கான பாரத ரத்னா விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங்கும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கான விருதை அவரது மகள் நித்யா ராவும் கர்பூரி தாக்கூருக்கான விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூரும் பெற்றுக்கொண்டனர்.