மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், பாராமதி தொகுதியில் சரத்பவார் மகளை எதிர்த்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார்.
இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலங்களாக உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து மகாராஷ்டிரா உள்ளது. எனவே மத்தியில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜக மகாராஷ்டிராவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
ஆனால், இந்த முறை பாஜகவுக்கு நிலைமை சாதகமாக இல்லை என்றும் இந்தியா கூட்டணி கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. இந்த கள நிலவரத்தை மாற்ற பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சிவசேனாவை உடைத்து தற்போது முதலமைச்சராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசை உடைத்து துணை முதலமைச்சராகியிருக்கும் அஜித் பவார் இருவருக்குமே மக்களிடையே பெரும் செல்வாக்கு இல்லாததால் தற்போது பாஜக திணறி வருகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான பாராமதி தொகுதியில் சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால், சரத் பவாரின் உறவினர்கள் பலரும் அஜித் பவாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அப்பா- மகன் போட்டி
இதேபோல மும்பை வடகிழக்கு தொகுதியில் தந்தை-மகனுக்கு இடையே போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு வேட்பாளராக அமோல் கீர்த்திகர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் சிவசேனா ஷிண்டே பிரிவு சார்பில் அமோலின் தந்தை கஜானந்த் கீர்த்திகரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் தந்தை-மகன் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்சிகளின் பிளவு, கூட்டணி மாற்றங்கள் ஆகியவை காரணமாக மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தல் பல குடும்ப சச்சரவுகளை வெடிக்க வைத்துள்ளது. எந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிப்பாளர்கள் என்பது ஆவலுடன் உற்று நோக்கப்படுகிறது.