புதுடெல்லி: கெஜ்ரிவால் ஒரு சிங்கம். சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அறைகூவல் விடுத்துள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், தனது கணவர் கெஜ்ரிவாலைச் சிறையில் அடைத்தது சரியானதா, பிரதமர் மோடி செய்தது நியாயமானதா என பேசுகையில் கண் கலங்கினார்.
அவர் சிறையில் இருந்து கெஜ்ரிவால் மக்களுக்கு எழுதிய கடிதத்தை வாசித்தார்.
இந்திய மக்கள் அனைவரும் இணைந்து பாஜக அல்லாத புதிய, வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும். ‘இண்டியா’ கூட்டணி சார்பில் 6 வாக்குறுதிகளை முன்வைக்கிறேன். அனைத்து ஏழைக்கும் இலவச மின்சாரம், பன்நோக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். டெல்லியில் வசிப்போருக்கு உரிய உரிமைகளை வழங்குவோம். இவ்வாறு அந்த செய்தியில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் பா.ஜ.,வில் சேர்ந்தால் சுத்தமாகி விடுகிறார்கள் என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடி பேசினார்.
400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக சொல்கிறது. அப்படி இருந்தால் ஏன் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்துகிறது? மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வி அடையும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பேரணியில் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பாய் சோரன், சரத் பவாா், அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொண்டு பேசினர். அதிகளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.