புதுடெல்லி: பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: “ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம்.
“நாங்கள் முன்வைக்கும் ஐந்து கோரிக்கைகள்: அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
“எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரங்களை முடக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இதே கோரிக்கையை பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.