புதுடெல்லி: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா, பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
“விமான ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாள்களாக நாங்கள் பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளோம். சில விமானச் சேவைகளுக்கு தாமதமும் ஏற்பட்டுள்ளது,” என்று விஸ்தாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விமானச் சேவைகளை இணைக்கும் விஸ்தாரா, சில உள்நாட்டுப் பயணப் பாதைகளில் பெரிய விமானங்களைப் பயன்படுத்தும். ‘போயிங் 787 டிரீம்லைனர்’, ‘ஏர்பஸ் ஏ321நியோ’ போன்றவை அவை.
கூடிய விரைவில் தனது வழக்கமான இயக்கத்துக்குத் திரும்புவதை விஸ்தாரா எதிர்பார்க்கிறது. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும் சேவையில் ஏற்பட்ட தாமதத்தாலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விஸ்தாரா மாற்று விமானச் சேவைகளை வழங்குகிறது அல்லது செலுத்திய பணத்தைத் திரும்பத் தருகிறது.
நேரத்தோடு புறப்படுவதைப் பொறுத்தவரை, ஏப்ரல் 1ஆம் தேதி உள்நாட்டு விமான நிறுவனங்களிலேயே விஸ்தாராவுக்குதான் ஆக மோசமான செயல்பாடு இருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
ஏர் இந்தியா ஊழியர்கள் பெறும் சம்பளத்துக்கு இணையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விஸ்தாரா விமானிகள் வேலைக்குத் திரும்பவில்லை என்று உள்ளூர் ஊடகம் சிஎன்பிசி-டிவி18 ஏப்ரல் 1ஆம் தேதி கூறியது.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவுடன் இணையும் நடவடிக்கையில் விஸ்தாரா ஈடுபட்டு வருகிறது. ஆண்டிறுதிக்குள் அந்த ஒப்பந்தம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிதாக்கப்படும் நிறுவனத்தில் எஸ்ஐஏ 25.1 விழுக்காடு பங்கு வகிக்கும். அது US$250 மில்லியன் (S$338 மி.) முதலீடு செய்கிறது.