புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் திரு மன்மோகன் சிங்.
கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த திரு மன்மோகன் சிங், புதன்கிழமையுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
திரு மன்மோகன் சிங் 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்தார்.
மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார்.
அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமையுடன் ஓய்வு பெறுகின்றனர்.
மன்மோகன் சிங் ஓய்வு குறித்து அரசியல் தலைவர்கள் பலர் சமூக ஊடகங்கள் வழி வாழ்த்துகள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.