புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தல் நெருங்குகையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாராப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசில் இருந்துவரும் இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் விஜேந்தர் சிங் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்து தென்டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் அவர் தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே, மதுரா தொகுதியில் மீண்டும் பாஜக சார்பாகப் போட்டியிடும் நடிகை ஹேமா மாலினிக்கு எதிராக விஜேந்தர் சிங்கைக் களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில், விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்ததை அடுத்து, ஹரியானாவிலும் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலும் உள்ள ஜாட் சமூகத்தினரின் ஆதரவு அக்கட்சிக்குக் கிடைக்கும் என்று பேசப்படுகிறது.
இந்த இரண்டு இடங்களிலும் பாஜகவுக்காக விஜேந்தர் சிங் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற முதல் இந்தியக் குத்துச்சண்டை வீரர் எனும் பெருமை அவரைச் சேரும்.
2006, 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டிகளில் அவர் வெள்ளி வென்றார்.
2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் 2009ஆம் ஆண்டு உலகக் குத்துச்சண்டை போட்டியிலும் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றார்.