சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டத்தில் 13 வயது மாணவியை முத்தமிட்டதற்காக பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்ட்ஹ 2018 பிப்ரவரியில் பள்ளியில் உள்ள ஊழியர் அறைக்கு அந்த மாணவியை அழைத்த ஆசிரியர் ஓம் பிரகாஷ் யாதவ், அவருக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அந்த மாணவியுடன் அறைக்கு வந்த சிறுமியை வெளியே அனுப்பிய யாதவ், அறைக் கதவுகளையும் சன்னல்களையும் மூடிய பின்னர் அந்த மாணவியை முத்தமிட்டார்.
பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. புரோகித், யாதவுக்கு ரூ.9,000 அபராதமும் விதித்தார்.
அச்சம்பவத்துக்குப் பிறகு அந்த ஆறாம் வகுப்பு மாணவி பள்ளியிலிருந்து அழுதுகொண்டு வீடு திரும்பினார். பெற்றோர் விசாரித்ததைத் தொடர்ந்து அவர்களிடம் அந்த மாணவி நடந்ததைச் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய வல்சாத் மாவட்ட அரசாங்க வழக்கறிஞர் அனில் திரிபாதி, அந்த மாணவியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த ஆசிரியர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதாகக் கூறினார்.
“மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது, பெற்றோருக்கு சமமானவர்கள் ஆசிரியர்கள். சமுதாயத்தில் ஆசிரியரின் நிலை உயர்வானது. பண்பட்ட சமுதாயத்தையும் தேசத்தையும் உருவாக்குவதில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு,” என்று அவர் வலியுறுத்தினார்.