விஜயபுரா: ஆழ்துளைக் கிணற்றில் இருபது அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது குழந்தை இருபது மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை பெற்றோருக்குச் சொந்தமான பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தபோது 14 மாதங்களே ஆன சத்விக் சதீஷ் முஜகொண்டா என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது.
இருபது அடி ஆழத்தில் சிக்கியிருந்த அக்குழந்தை, மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் மீட்கப்பட்டது.
உடனே குழந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தையை மீட்பதற்காக மாநில பேரிடர் நடவடிக்கை குழுவும் தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழுவும் இரவு பகலாக இருபது மணி நேரம் போராடினர்.
ஆழ்துளை கிணற்றில் குழந்தை உயிரோடு இருப்பதற்காக பிராண வாயு செலுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுக்காவில் உள்ள லச்சனா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சதீஷ் முஜகொண்டா, 30, இவரது மனைவி பூஜா, 26 ஆகியோருக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் விளைச்சல் நிலம் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆழ்துளை கிணறு தோண்ட முடிவு செய்த அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்தனர்.
ஏறக்குறைய 500 அடி ஆழம் வரை ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதில் விழுந்து இருபது அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இருபது மணி நேரம் போராடி குழந்தை மீட்கப்பட்டுள்ளது.