திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி புதன்கிழமை (ஏப்ரல் 3) வேட்புமனு தாக்கல் செய்தபோது சொத்து விவரங்களை வெளியிட்டார்.
தன் சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகனத்தில் பேரணியாகச் சென்று அவர் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு தொடர்பான பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.
அதில் 9.24 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் 11.5 கோடி ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சொந்த வாகனம் கிடையாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுக்குமாடி வீடு இல்லை, கையில் ரொக்கம் ரூபாய் 55,000 உள்ளது, வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் முதலீடு உள்ளது. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன, 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூச்சுவல் நிதி உள்ளது, 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கப் பத்திரம் உள்ளது, 4.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன, ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது, தனது சகோதரி பிரியங்காவுடன் சேர்ந்து விவசாய நிலம் உள்ளது என்று பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
“வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அவர் ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பெயரை உயர்த்தவில்லை.
“வயநாடு தொகுதியில் போக்குவரத்து பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ரயில் பாதையை கொண்டுவர எந்த முயற்சியும் இல்லை,” என ஆனி ராஜா சாடியுள்ளார்.
வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி, அதன் மாநிலத் தலைவர் கே, சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது.
வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது.