திருப்பதி: ஆந்திர மாநிலம் பத்ராசலம் ராமர் ஆலயம் சார்பில் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
பக்தர்கள், நன்கொடையாளர்களின் உதவியுடன் 33 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி செலவில் அங்கு ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்கி உள்ளதாக பத்ராசலம் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.
கோவில் கட்டுமானப் பணிக்காக அல்லகட்டா பகுதியில் உள்ள பாறைகளில் தூண்களும் சிலைகளும் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் நிறைவடைந்ததும் சீதா, ராமர் சிலைகள் சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, கலிஃபோர்னியா, ஐஸ்லாந்து, ஜப்பான், அலாஸ்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
அதன்பின்னர் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.