பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 26, மே மாதம் 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில் அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கென சிறப்பு பறக்கும் படைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், சாமராஜநகர் தொகுதியில் கலால்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு கிடங்கில் இருந்து ரூ. 98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர் மதுபானத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாநிலம் முழுவதும் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

