புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முயற்சி செய்துவிட்டு பாகிஸ்தானுக்குத் தப்பியோடி அங்கு பதுங்கிகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக இருக்கலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தால் அது மிகவும் தவறு என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏபர்ல் 5ஆம் தேதி சிஎன்என் நியூஸ் 18 ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அத்தகைய பயங்கரவாதிகளை இந்தியா ஒருபோதும் விடாது என்றும் இந்தியப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து அவர்களது கதையை முடிப்பர் என்றும் திரு சிங் அதிரடியாகக் கூறினார்.
2020ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானிய மண்ணில் ஏறத்தாழ 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் ஏப்ரல் 4ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டது.
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்யப்பட்டதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
இந்தச் செய்தி குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சும் மௌனம் காத்தது. இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகள் தனது மண்னில் இல்லை என்று அது அடித்துக் கூறுகிறது
“அண்டை நாடுகளுடனான நல்லுறவைப் பேணிக் காப்பதே இந்தியாவின் இலக்கு. இருப்பினும், எங்களிடம் மீண்டும் மீண்டும் கோபப் பார்வையைக் காட்டி, இந்தியாவுக்கு வந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அவர்களை விட்டுவைக்கமாட்டோம், கருணை காட்டமாட்டோம்,” என்று திரு சிங் எச்சரித்தார்.