போபால்: திருமண பந்தமின்றி சேர்ந்து வாழும் உறவு முறையில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த இருவர் சில பிரச்சினைகள் பிரிந்தனர். இதில் அந்தப் பெண், பராமரிப்புச் செலவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் 1,500 ரூபாய் பராமரிப்புச் செலவு தர வேண்டும் என்று, அவரது துணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த ஆண், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றமும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
“இந்த தம்பதி, நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த உறவில் குழந்தையும் பிறந்துள்ளது.
“சட்டபூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும், அந்த பெண்ணுக்கு, அந்த ஆண், ஜீவனாம்சம் எனப்படும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்.
“தற்போதைய நவீன வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், லிவ் இன் வாழ்க்கை என்பது சகஜமாகிவிட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் மாறிவிட்டது,” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சேர்ந்து வாழும் உறவில் உள்ளவர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீவனாம்சம் உள்ளிட்ட உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.