புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 7) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு காலை 10 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி ஒன்பது முறை அழைப்பாணை அனுப்பியும் கெஜ்ரிவால் முன்னிலையாகவில்லை.
இந்த அழைப்பாணையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்தத் தடையும் விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.