நாக்பூர்: இந்தியாவின் நாக்பூர் நகரில் உள்ள ஒரு பான் பராக் கடையில் இளம் பெண் ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்தார்.
பான் பராக் கடையில் நின்றுகொண்டு புகைபிடித்துக்கொண்டிருந்த தம்மை ஆடவர் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை 24 வயது ஜெயஸ்ரீ பந்தாரே கவனித்தார்.
கோபமடைந்த ஜெயஸ்ரீ, நான்கு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான அந்த 28 வயது ரஞ்சித் ராத்தோட்டை நோக்கி சிகரெட் புகையை ஊதி வசைபாடினார்.
இதை ராத்தோட் தமது கைப்பேசியில் காணொளி எடுத்தார்.
பதிலுக்கு ஜெயஸ்ரீயை ராத்தோட் ஏசியதும் காணொளியில் பதிவானது.
இதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற ஜெயஸ்ரீ, தமது இரு ஆண் நண்பர்களை அழைத்தார்.
இதற்கிடையே, ராத்தோட் அங்கிருந்து புறப்பட்டு தமது வீடு நோக்கிச் சென்றார்.
வழியில் பீர் அருந்த அவர் ஒரு கடைக்குள் புகுந்தார்.
அங்கு ஜெயஸ்ஸ்ரீயும் அவரது ஆண் நண்பர்களும் அவரை வழிமறித்தனர்.
இருதரப்பினருக்கும் இடையிலான வாக்கு வாதம் முற்றியதை அடுத்து, ராத்தோட்டை ஜெயஸ்ரீ பலமுறை கத்தியால் குத்தி்க் கொன்றார்.
பிறகு அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராத்தோட்டை ஜெயஸ்ரீ கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.