மும்பை: இந்தியாவின் இசை நகரம் என்றழைக்கப்படும் மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில், மும்பைக்கு மேற்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்திருக்கும் சிறிய நகரம் மீரஜ். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இசைக் கருவி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மன்னராட்சி காலத்தில் வாள் உள்ளிட்ட போர் ஆயுதங்களைத் தயாரித்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
அண்மைக்காலமாக மீரஜ் நகர தயாரிப்பு என்ற பெயரில் சந்தையில் போலி இசைக் கருவிகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மீரஜ் நகர இசைக்கருவிகள் உற்பத்தியாளர் சங்கம் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது.
“இந்த நகரில் ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் இசைக் கருவிகளை தயாரித்து வருகின்றனர். அவர்களின் சிதார், தம்புரா கருவிகளுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. எங்கள் நகரிலிருந்து இந்தியா முழுவதும் இசைக் கருவிகளை அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்,” என்று சங்கத்தின் தலைவர் மோசின் மீரஜ்கர் கூறியுள்ளார்.
உஸ்தாத் அப்துல் கரீம், கான்சாகேப், பண்டிட் பீம்சென் ஜோஷி,ரஷீத் கான் உள்ளிட்டோர் மீரஜ் நகர இசைக் கருவிகளையே பயன்படுத்தினர். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் மீரஜ் நகரின் இசைக் கருவிகளையே விரும்புகின்றனர் என்றும் மோசின் மீரஜ்கர் தெரிவித்தார்.