புதுடெல்லி: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தெற்கு, கிழக்கு இந்திய மாநிலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெறும் என்று அவர் கணித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இத்தருணத்தில் தேர்தல் குறித்துப் பேசிய திரு பிரசாந்த் கிஷோர், வடக்கு, மேற்கு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையான இடங்களை வெல்லும். கிழக்கு, தெற்கு மாநிலங்களில் ஏற்படும் பின்னடைவை ஈடுசெய்யும் என்றார்.
மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடம்
“தமிழகத்தில் முதல்முறையாக வாக்குப் பங்கீட்டில் பாஜக இரட்டை இலக்கத்தில் இருப்பதை நான் ஓராண்டுக்கு முன்பே கூறியிருந்தேன். அவர்கள் தெலுங்கானாவில் முதல் அல்லது இரண்டாவது கட்சியாக இருப்பார்கள் என்பது பெரிய விஷயம். நிச்சயமாக ஒடிசாவில் முதலிடத்தைப் பிடிப்பார்கள்.
“மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கும் என்பது என் கணிப்பு,” என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலில் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் 204 இடங்கள் உள்ளன. ஆனால், 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்த மாநிலங்களில் பாஜகவால் 50 இடங்களைத் தாண்ட முடியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த முடியாது என்ற கருத்து ஒரு மாயை. இப்போது தேசிய அளவில் பாஜக ஆதிக்கம் செலுத்தினாலும், அந்தக் கட்சியோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ வெல்ல முடியாதவர்கள் அல்ல.
பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.
கடந்த 2015, 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அசாமைத் தவிர பல மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால் அதன் பிறகு பாஜக மீண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதித்துவிட்டன. கிரிக்கெட் போட்டியில் பீல்டர்கள் கேட்சை தவறவிட்டால் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் சதம் அடிக்கத்தான் செய்வார். இதுபோன்றதுதான் அரசியலும்.
மக்களவைத் தேர்தலில், பாஜக வலுவாக உள்ள வடக்கு,மேற்கு இந்தியாவில் அக்கட்சியை 100 இடங்களிலாவது இண்டியா கூட்டணியினர் தோற்கடிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியும். ஆனால் அது நடக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணி விரும்பத்தக்கதோ, பயனுள்ளதோ அல்ல. அவர்களிடம் இலக்கு, திட்டம் எதுவும் இல்லை.
அதேநேரம், ஜே.பி.நட்டா தலைமையிலான பாஜகவின் இலக்குப்படி 370 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
ஆனால் 300 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பாஜக வலுவாக இல்லாவிட்டாலும் அண்மைய காலமாக வளர்ந்து வரும் ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா,மேற்கு வங்கத்தில் இந்த முறை அக்கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் வழிவிட வேண்டும்
கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனாலும் தற்போதும் அவர் தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும் என்றும் திரு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக்கூடாது. காங்கிரசை ஒரு கட்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. நாட்டில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒருபோதும் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது. அது சாத்தியமில்லை.
காங்கிரஸ் அதன் வரலாற்றில் பலமுறை பரிணாம வளர்ச்சி அடைந்து, மறு பிறவி எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்துகொண்டதால் தனது கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல.
2014ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதை சரிசெய்வது வெற்றிக்கு அவசியம் என்றார் திரு பிரசாந்த் கிஷோர்.