அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை வழங்குவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசு தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்வதாக சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பல முறை குற்றஞ்சாட்டியிருந்தார். தரமற்ற மதுவைக் கொடுக்கும் அதே நேரத்தில் விலையை மட்டும் உயர்த்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் லாபமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் பிதாபுரத்தில் நடந்த பேரணியில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
“ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விற்கும் மதுவைத் தொடர்ந்து குடித்தால் மக்கள் நோய்வாய்ப்படுவார்கள். நடிகர் ஜெகன்மோகன் ரெட்டி மது விற்பனை மூலம் ரூ.40,000 கோடி கொள்ளையடித்துள்ளார்.
“மது வாங்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க மறுக்கிறார்கள். அதற்கான காரணமும் தெரியவில்லை. ஒட்டுமொத்த மது விற்பனையில் 74% மதுவை வெறும் 16 நிறுவனங்கள் சப்ளை செய்கிறது. அது ஏன் என்பதும் புரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்கும் நிலையில், மதுபான விவகாரம் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. தேர்தலில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். அங்கு வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.