பாட்னா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை இணையவாசிகள் பலரும் கேலிசெய்து வருகின்றனர்.
இண்டியா கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் பிறகு அதிலிருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் பீகாரின் நவாடா மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிதிஷ் குமார் உரையாற்றினார். இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 லட்சம் இடங்களில்” என்று கூறி தடுமாறிய நிலையில், பிறகு திருத்திக் கொண்டு “4 ஆயிரம் இடங்களில் வெற்றி பெறும்” என்று கூறிக்கொண்டே பிரதமர் மோடியை பார்த்தார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகப் பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் நிதிஷ் குமாரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் சரிகா பாஸ்வான் தனது எக்ஸ் வலைதளத்தில் “பிரதமருக்கு 4 லட்சம் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவிக்க பீகார் முதல்வர் விரும்பினார். பிறகு அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் 4,000 போதுமானதாக இருக்கும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்” என்று நிதிஷ்குமாரின் உரையைக் கேலிசெய்து பதிவிட்டுள்ளார்.