அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரை ஏமாற்றி பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுக்க வைத்தது அம்பலமாகி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி மன்வரிடமிருந்து கடந்த 2023ம் ஆண்டு அதானி நிறுவனம் நிலத்தை வாங்கி உள்ளது.
அதற்கான ரூ.11.14 கோடி பணத்தை கொடுக்காத அந்நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தினால் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளது. இதனால் அந்தத் தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினால், சில ஆண்டுகளில் அந்தத் தொகை மதிப்பு கூடும் என அதானி நிறுவன மேலாளர் மகேந்திர சிங் சோதா என்பவர் கூறியதாகத் தெரிகிறது.
இதனை நம்பி தேர்தல் பத்திரங்களை வாங்க மன்வர் குடும்பம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட அந்தத் தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கியிருப்பதாகத் தற்போது தெரியவந்துள்ளது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த விவசாய குடும்பத்தினர் கடந்த மார்ச் 18ம் தேதி குஜராத் காவல்துறையிடம் புகார் அளித்தது. ஆனால் இதுவரை காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதானி நிறுவனத்தின் 4 இயக்குனர்கள், மேலாளர் மகேந்திர சிங், பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோர் மீது விவசாயக் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.