சியோனி: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களின் வங்கி கணக்குக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் செலுத்தப்படும்,”என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தனோரா பகுதியில் திங்கட்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “எங்கள் தேர்தல் அறிக்கையில் 4 புரட்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. புதிய அரசு அமைந்ததும் பட்டியலின பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கி கணக்குகளில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்தை செலுத்துவோம். இது மாதந்தோறும் சில ஆயிரங்களாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணத்தை இரட்டிப்பாக்குவோம்,” எனக் கூறினார்.
“நாட்டில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத இளைஞருக்கும் அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு ஆண்டுப் பயிற்சி பெறுவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம். இந்தப் பயிற்சியின்போது, அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, சிறப்பாக செயல்பட்டால், அதே இடத்தில் வேலையும் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசுத் துறையில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்,” என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளை மக்களிடம் உரையாற்றும்போது ராகுல் எடுத்துரைத்தார்.