திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தலில் தமது மகன் தோற்க வேண்டும் என்று முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக அனில் அந்தோணி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. அந்தோணியிடம் அவரது மகன் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு இருப்பது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்குப் பதிலளித்த ஏ.கே.அந்தோணி, “பத்தனம்திட்டா தொகுதியில் எனது மகனின் கட்சி தோல்வி அடையவேண்டும். அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோணி வெற்றி பெறவேண்டும்,” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பாஜகவில் இணைவது தவறான செயல் என்றும் காங்கிரஸ் தனது மதம் என்றும் ஏ.கே. அந்தோணி குறிப்பிட்டார்.