புதுடெல்லி: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பங்காளித்துவம், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்புடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
“பிரிக்ஸ் எனும் பெரிய சந்தைப் பொருளியலைக் கொண்ட நாடுகள் குழுமத்தில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இன்னும் பல துறைகளின் ஒத்துழைப்பில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன,” என்றார்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், எத்தியோப்பியா போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்துள்ளது, சவூதி அரேபியா அதில் சேர பரிசீலித்து வரும் வேளையில், அமெரிக்காவுக்கு உலக அரங்கில் இருக்கும் செல்வாக்குக் குறைந்து காணப்படுகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “உலகளாவிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இன்னும் வலுவான செல்வாக்கு உள்ளது. உலகின் முக்கிய பகுதிகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள வலுவான பங்களிப்பைப் பார்க்கும்போது, நாம் மிகச் சிறந்த நிலையில் தொடர்ந்து நீடித்து வருவது தெரிய வரும்,” என்றார்.
இதற்கிடையே, புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற்ற இந்தியா பற்றிய மாநாட்டில் பேசிய இந்தியாவுக்கான தூதர் எரிக் கார்செட்டி, “நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க, உணர, வேலை பார்க்க வேண்டுமானால், இந்தியாவுக்கு வருகை புரியுங்கள், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தலைவர் என்ற முறையில் நான் நாள்தோறும் அதை உணர்கிறேன்.
“இந்தியாவுடனான பங்காளித்துவத்தை அமெரிக்கா மதிக்கிறது. நாங்கள் இங்கு கற்பிக்க வரவில்லை. மாறாக, இந்தியாவின் சாதனைகள் பற்றி கேட்டறிந்துகொள்ளவும் அதன் மூலம் பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் வந்திருக்கிறோம். உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்,” என்று விவரித்தார்.