புதுடெல்லி: மதுபான ஊழல் வழக்குத் தொடர்பில் தான் கைது செய்யப்பட்டது செல்லாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் புதன்கிழமை (ஏப்ரல் 10) தெரிவித்தார். அத்துடன், கெஜ்ரிவாலின் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இந்த வார இறுதி வரை திகார் சிறையில் கழிப்பார். உச்ச நீதிமன்றம் அடுத்த திங்கட்கிழமை திறக்கப்படும்போது, ஆம் ஆத்மி கட்சித் (ஏஏபி) தலைவரின் மனு அப்போது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரம் பற்றிப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ், கலால் கொள்கையை ஊழல் என்று கூறுவது முதல்வர் கெஜ்ரிவாலையும் அவரது கட்சியையும் ஒழிப்பதற்கான அரசியல் சதி என்று கூறினார். சஞ்சய் சிங்குக்கு பிணை வழங்கியது போல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உச்ச நீதிமன்றத்தில் வழி பிறக்கும் என்று முழு நம்பிக்கை இருப்பதாக சௌரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.
இதனிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் அவரது தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமாரும் சந்தித்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் கெஜ்ரிவாலுடன் அவர் சந்தித்த முதல் சந்திப்பு இதுவாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறை விதிகளின்படி, ஒரு கைதி வாரத்திற்கு இரண்டு முறை பார்வையாளர்களை நேருக்கு நேர் அல்லது காணொளி சந்திப்பு மூலம் சந்திக்கலாம்.
மதுபான ஊழல் வழக்கில் தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த மறுநாளன்று அமலாக்கத் துறை கெஜ்ரிவாலைக் கைது செய்தது. இதுபோல் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனக் கூறி கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா பிறப்பித்த உத்தரவில், “கெஜ்ரிவால் ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது. முதல்வர் என்பதற்காக அவருக்கு சலுகை காட்ட முடியாது,” எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.