புதுடெல்லி: டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், அவருக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரியான வைவிவிஜே ராஜசேகர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின்படி அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று அவர்கள் மீது அளித்த புகாரை மார்ச் மாதம் இரண்டாம் தேதியன்று அந்த நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யுமாறும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் நீதிமன்றம், வருவாய் துறை காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டது.
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று டாடாக்காடா கிராமத்தில் தாங்கள் நடத்தும் பள்ளி ஒன்றுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நால்வரை அனுப்பியதாக பிளெசன்ட் வேலி ஃபவுண்டேஷன் எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பு கூறியது. அந்நபர்கள் தங்களின் அலுவலகம் ஒன்றைச் சேதப்படுத்தி அங்கிருந்த கோப்புகள், ஆவணங்கள், பென் டிரைவ் சாதனங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாவும் அந்த அமைப்பு சொன்னது.
எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களில் நரேஷ் குமார், ராஜசேகர் ஆகியோர் ஈடுபட்ட மோசடிகளுக்கான ஆதாரங்கள் இருந்ததாக அமைப்பு கூறியது.