தர்மபுரியிலிருந்து கு. காமராஜ்
“யார் வந்தாலும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்,“ என்று தமிழ் முரசிடம் பேசிய தர்மபுரியில் உள்ள பேகாரஅள்ளி பஞ்சாயத்தைச் சேர்ந்த எஸ். மங்கம்மா, 29 ஆதங்கப்பட்டார்.
தர்மபுரியில் தண்ணீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.
இரண்டு மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை என்று வாடகை கார் ஓட்டுநரான நிர்மல், 40, தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்சினை ஒட்டுமொத்த தர்மபுரி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது,
பேகாரபள்ளி பிரசாரக் கூட்டத்தில் பேசிய தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளரான செளமியா அன்புமணி, “எங்கே போனாலும் தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை என்றே சொல்கிறார்கள். பெண்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். எனக்கு வாய்ப்பு அளித்தால் டெல்லியில் பேசி இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன்,” என்றார்.
பேகாரஅள்ளி பகுதிக்கு வந்த சௌமியா அன்புமணியை ஏராளமானத் தொண்டர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி வரவேற்றனர், மேளதாளங்கள் காதைக் கிழித்தன. அவர் பெயரைக் குறிப்பிட்டு முழக்கமிட்டனர். பெண்கள் அவரை சூழ்ந்து ஆரத்தி எடுத்தனர். ஒரு குழந்தைக்கு ‘சாரல்’ எனப் பெயரிட்டார்.
“சாரல் என்பது மழையைக் குறிக்கிறது,” என்றார் அவர்.
பின்னர் தமிழ் முரசிடம் பேசிய திருமதி சௌமியா, “எனக்கு இரண்டு குறிக்கோள், தண்ணீர் பிரச்சினைத் தீர்ப்பது, தொழிற்சாலைகளை அமைப்பது, அப்போதுதான் தர்மபுரி இளையர்களுக்கு வேலை கிடைக்கும்,” என்றார்.
தர்மபுரியில் பலரிடம் பேசியபோது தண்ணீர்ப் பிரச்சினையை தலையாயப் பிரச்சினையாகக் குறிப்பிட்டனர்.
தனது கணவரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாசுக்குப் பிரசாரம் செய்த அனுபவம் செளமியாவுக்கு இருப்பதால் தேர்தல் களத்தை சிக்கல் இல்லாமல் அவர் சமாளித்து வருகிறார். அவரது மகள்களும் தொகுதியில் வாக்குச் சேகரிப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இத்தொகுதியில் பாமகவுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு தவிர, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளும் சௌமியா அன்புமணியின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
தர்மபுரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த டி.வி.என் செந்தில் குமார் மீண்டும் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக, இண்டியா கூட்டணியின் சார்பில் திமுகவைச் சேர்ந்த ஆ.மணி போட்டியிடுகிறார். வழக்கறிஞரான இவர், திமுக தொண்டர்களிடையே பிரபலமானவர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் பிரசாரம் செய்கிறார்.
அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆர். அசோகன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் ஆவார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இருப்பது இவருக்கு பக்க பலமாகப் பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து வாக்குச் சேகரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி, விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் அபிநயா பொன்னிவளவன் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. இவர், தொகுதிக்கு புதியவர் என்றாலும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரசாரம் செய்கிறார்.
இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி பலத்துடனும் நாம் தமிழர் கட்சி தனியாகவும் களம் காண்கின்றன.