புனே: மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அங்கு, அவர் இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.
அப்போது, இந்தியா நல்லுறவை பேணுவதில் சிரமமாக இருக்கும் நாடுகள் எவை என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
“1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் காஷ்மீருக்குள் ஊடுருவியது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தபோது, அதை நாம் நிறுத்திவிட்டு ஐக்கிய நாடுகள் அவைக்குச் சென்றோம். பயங்கரவாதம் என்று சொல்வதற்கு பதிலாக பழங்குடியின ஊடுருவல்காரர்கள் என்று நாம் குறிப்பிட்டோம்,” என்றார் அக்கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர்.
மேலும், “பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியுறவுக் கொள்கை தற்போது 50 விழுக்காடு மாறியுள்ளது. எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மைத் தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது. பயங்கரவாதிகள் எந்த விதிகளின் படியும் செயல்படுவது இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கான பதிலடியும் விதிகளின்படி இருக்காது,” என்றார்.