மும்பை: மகராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் இருக்கும் பாந்த்ரா வட்டாரத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானின் வீடு அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் அவரது வீட்டின் முன்புறம் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டிலிருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 15 குழுக்களை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மும்பை காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கானுக்கு இதற்கு முன் பலமுறை கொலை மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.