வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் வழக்கமான காவலர் சீருடைக்கு பதிலாக காவி உடை அணிந்துள்ளனர். அவர்கள் அர்ச்சகர்கள் அணியும் வகையிலான காவி ஆடைகளும் ருத்ராட்ச மாலையும் அணிந்து பணியில் நியமிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “காவலர்கள் அர்ச்சகர் போல் உடை அணிந்துள்ளனர். இதுபோன்ற உத்தரவு பிறப்பித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். சீருடை அணியாமல் காவலர்களை நியமித்து இருப்பது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். காவலர்கள் என்ற போர்வையில் யார் வேண்டுமானாலும், கோயிலுக்குள் செல்ல வாய்ப்பு ஏற்படும்,” என்றார்.
பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாரணாசி காவல்துறை ஆய்வாளர் மோஹித் கூறினார்.