புதுடெல்லி: பாஜக தனது தேர்தல் அறிக்கையை ‘பிரதமர் மோடியின் உத்திரவாதம் 2024’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இண்டியா’ கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மோடி சொன்னதை செய்யவில்லை,” என்றார்.
மேலும், மக்கள் பலன்பெறும் வகையில் எந்த பெரிய திட்டத்தையும் பிரதமர் மோடி செயல்படுத்தவில்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், இவற்றை பற்றி மோடிக்கு எந்தவொரு கவலையும் இல்லை,” என்றார் கார்கே.
ஏழை மக்களுக்கென்று எந்தவொரு திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை என்றும் பாஜகவின் அறிக்கை நம்புவதற்கு உரியதாக இல்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே
“பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்கள் பற்றியும், மணிப்பூர் குறித்தும் எதுவும் இடம்பெறவில்லை. வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கப்படவில்லை. வேளாண் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பற்றி ஏன் குறிப்பிடவில்லை,” என சுப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஸ் திவாரி
“பணவீக்கத்தால் ஏன் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என பொது மக்கள் கேட்கிறார்கள். மக்களை தொந்தரவு செய்யும் உண்மையான பிரச்சினைகள் களத்தில் உள்ளன. களத்தில் நிலவும் அதிருப்தி தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வியாக மாறப்போகிறது,” என்றார் அவர்.