கொச்சி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒரு முக்கியச் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.
இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் மனோஜ் உன்னி என்பவர் உயிரிழந்தார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு உன்னி கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, எவ்வித எச்சரிக்கையுமின்றி சாலையின் குறுக்கே கயிறு கட்டப்பட்டிருந்ததாகவும் இரவில் அதை அடையாளம் காண்பது சிரமமாக இருந்ததாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அந்தக் கயிறு கட்டப்பட்டிருந்தது. இருப்பினும், இரவில் தெரியும்படி ரிப்பன் அல்லது பிரதிபலிக்கும் குறியீடுகள் எதுவும் இல்லை,” என்று உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.
கேரளாவில் பாஜகவின் தேர்தல் பிரசார அங்கமாக இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி திங்கட்கிழமை உரையாற்ற உள்ளார்.